தாயகம்

கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட யாழ் இளைஞன்!

#france news#

போலி கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமுலாக்கப் பிரிவினர் இன்று (16) காலை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கத்தாரின் தோஹா நோக்கிச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் சந்தேகநபர் வழங்கிய கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் எழுந்ததால், விமான நிலைய அதிகாரிகள் அவரை விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மேலதிக விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளனர். இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் இலங்கை கடவுச்சீட்டும் அவரிடம் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் இலங்கை ஏர்லைன்ஸ் கவுன்டர்களில் போலி கனேடிய கடவுச்சீட்டை சமர்ப்பித்து தோஹா சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் மாலைத்தீவு செல்வதாக கூறியுள்ளார்.

இதன்போது அவரிடம் நடத்திய விசாரணையில், கனடாவில் உள்ள உறவினர் ஒருவர் தனக்கு உதவியதாகவும், கனடாவில் உள்ள நபர் இலங்கையில் உள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாவை கொடுத்து இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Back to top button